இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தாலும் அவர்களில் துடுக்கும் மிடுக்குமாக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளம் பெற்றவர் நடிகை வசுந்தரா. தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பையும் பெற்ற வசுந்தரா, செலக்டிவான படங்களில் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
“நான் எதிர்பார்ப்பது சவாலான கதாபாத்திரங்களைத்தான். அதில் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்றால் வருஷத்துக்கு ஒரு படம் தான் பண்ண முடியும். ஆனால் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிக்கும்போது முதலில் நமக்கே போர் அடிக்காது. நடிப்பை வெளிப்படுத்த அதிக வாய்ப்பும் இருக்கும். தமிழ் சினிமாவில் எப்போதுமே பெண்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது. முன்பெல்லாம் மக்கள் அப்படி நடிப்பவர்களை நிஜத்திலும் வில்லியாகவே பார்த்தார்கள். இப்போது காலம் மாறிவிட்டது.. மக்களும் அந்த கதாபாத்திரத்தை ரசிக்கும் அளவுக்கு மாறிவிட்டார்கள். நடிகை ரம்யா கிருஷ்ணன் பாசிடிவ், நெகடிவ் என இரண்டு கதாபாத்திரங்களிலும் சூப்பராக நடிப்பவர். அவருடைய ரசிகை நான்.. ஒரு பாவமான, கஷ்டப்படுகிற ஹீரோயினாக நடிப்பதை விட ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கெத்தாக நடிக்கலாம்.
தமிழ் தான் எப்போதுமே என் சொந்த வீடு.. என்றாலும் ஒரு நடிகையாக முழுமை பெற மற்ற மொழிகளிலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன். குறிப்பாக மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. மலையாள படங்களை பார்க்கும்போது இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நாம் நடித்திருக்கலாமே என்கிற ஏக்கம் இயல்பாகவே எனக்குள் எழும். தெலுங்கில் ஆரம்பத்தில் எனக்கு சில வாய்ப்புகள் வந்தது. சில சூழல்கள் காரணமாக அந்த வாய்ப்புகள் மிஸ் ஆகி போனது. அந்த வகையில் மன திருப்திக்காக மலையாள படங்களிலும் கேரியர் வளர்ச்சிக்காக தெலுங்கு படங்களிலும் நடிக்க விரும்புகிறேன்..