தன்னுடைய குடும்ப சூழல் காரணமாக சிறு வயதில் இருந்தே கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்து வருகிறார் சந்தானம். அவர் வசிக்கும் கிராமத்தினருக்கு காட்டேரியை கண்டால் பயம். அந்த வகையில் ஊர் மக்கள் ஒருவரை காட்டேரி என பயந்து கொண்டிருக்கிறார்கள். இதே ஊரில் பானை செய்யும் தொழிலாளியாக சந்தானம் நடித்துள்ளார்.
அப்படியாக சந்தானம் செய்த பானையால் ஊர் மக்கள் காட்டேரி என நினைத்து அஞ்சி நடுங்கிய ஒருவர் எதிர்பாராத தருணத்தில் வீழ்த்தப்படுகிறார். உடனே ஊர் மக்கள் அந்த பானையை அம்மன் கடவுளாக வணங்க தொடங்குகின்றனர். இந்த சூழலை சரியாக பயன்படுத்தி கொள்ளும் சந்தானம் பானை அம்மன் எனும் மக்களின் நம்பிக்கையை கொண்டு வருமானம் ஈட்டுகிறார்.
அடுத்ததாக பானையை கடவுளாக வைத்து அதே ஊரில் சந்தானம் கோவில் ஒன்றை கட்டுகிறார். மேலும் கோவில் மூலம் சந்தானம் தனது வருமானத்தை அதிகப்படுத்தி வருகிறார். ஒரு கட்டத்தில் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை அபகரிக்க அந்த ஊர் தாசில்தார் முயற்சிக்கிறார்.
இதன் காரணமாக கோவிலுக்கு சீல் வைக்கப்படுகிறது.சீல் வைக்கப்பட்ட சந்தானத்தின் கோவில் மீண்டும் திறக்கப்பட்டதா? இதைத்தொடர்ந்து என்னவானது என்பதே வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகன் சந்தானம் கதைக்கு ஏற்ற நடிப்பை சிரமம் இன்றி வெளிப்படுத்தி இருக்கிறார். சந்தானத்துடன் மாறன், சேஷூ கூட்டணி படம் முழுக்க சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இயருக்கின்றனர்.
இவர்களுடன் நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன், மேகா ஆகாஷ், ரவிமரியா, ஜான் விஜய், கூல் சுரேஷ் என ஒவ்வொருத்தரும் கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
படத்தின் முதல் பாதி முழுக்க காமெடி காட்சிகள் நிறைந்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் மைய பிரச்சினை இரண்டாம் பாதியின் இறுதியில் தான் துவங்குகிறது. படத்தில் வடக்குப்பட்டி மற்றும் தெக்குப்பட்டிக்கு இடையில் என்ன பிரச்சினை என்பதில் தெளிவில்லை. படத்தின் கதை எங்கெங்கோ சென்று ஒருவழியாக முடித்த உணர்வை தருகிறது. காமெடி காட்சிகள் ஓரளவிற்கு கைகொடுத்து இருக்கிறது.
படத்தில் ஷான் ரோல்டனின் இசை கவனம் பெற்று இருக்கிறது. காட்சிகளை படமாக்கியதில் தீபக் எந்த குறையும் வைக்கவில்லை.