ஷாரிக், அரண், ஆஷிக் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். தொழில்நுட்பத்தை புதிதாக கண்டு பிடிப்பதில் ஆர்வம் கொண்ட அறன் பேராசிரியரால் அவமான படுத்தப்படுகிறார். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான அரணை நண்பர்கள் ஷாரிக், ஆஷிக் இருவரும் காரில் வெளியே அழைத்து செல்கிறார்கள்.
அப்போது பவித்ரா லட்சுமியை காரில் கடத்தப்படுவதை பார்க்கின்றனர். அவரை காப்பாற்றும் முயற்சியில் நண்பர்கள் மூவரும் ஈடுபடுகின்றனர். குற்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் இருப்பிடத்தை கண்டறியும் அரணின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளம் பெண்ணை காப்பாற்ற முயற்சி செய்கின்றனர்.
இறுதியில் பவித்ரா லட்சுமியை நண்பர்கள் காப்பாற்றினார்களா? பவித்ரா லட்சுமியை கடத்த காரணம் என்ன? என்பதே படத்தின் கதை.
வித்தியாசமான கதையை சுவாரஸ்யத்துடன் ஜிகிரி தோஸ்த் படத்தின் மூலம் சொல்லி உள்ளார் இயக்குனர் அரண். முதல் படம் என்றாலும் இயக்கத்திலும், நடிப்பிலும் பாராட்ட வைக்கிறார். அவருடன் நண்பர்களாக ஷாரிக், ஆஷிக் ஆகியோர் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. நண்பர்கள் அனைவருக்கும் சமமான காட்சிகள் வைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர்.
ஷாரிக்கின் காதலியாக வரும் அம்மு அபிராமி சில காட்சிகளே வந்தாலும் கண்களுக்கு விருந்தாக உள்ளார். ஆரம்பம் முதல் கடைசி வரை கடத்தப்பட்டு சித்ரவதைக் குள்ளாகும் பவித்ரா லட்சுமி பரிதாபத்தை வரவழைக்கிறார். வில்லனாக வரும் சிவனின் நடிப்பு பாராட்டி பெற்றிருக்கிறது.
அஸ்வின் விநாயக மூர்த்தி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். சரண் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக அமைந்து இருக்கிறது.