நாயகன் காளிதாசின் அக்கா நமீதா பிரமோத்வும் மாமா சாய்ஜுவும் காரில் செல்கிறார்கள். அப்போது பெட்ரோல் இல்லாத காரணத்தால் நடுவழியில் கார் நின்று விடுகிறது. நமீதாவை காரிலேயே இருக்க சொல்லிவிட்டு, பெட்ரோல் வாங்க செல்கிறார் சாய்ஜு. சிறிது நேரத்தில் காரின் மேல் பகுதியில் ஒரு பெண் சாய்ஜுவை கொலை செய்கிறார்.
இதை பார்க்கும் நமீதா, அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுகிறார். மருத்துவமனையில் நமீதாவை சந்திக்கும் காளிதாஸ், தன் அக்காவின் நிலைமைக்கு வருந்துகிறார். மேலும் அவரையும் ஒரு பெண் பின் தொடர்வது போல் உணர்கிறார். யார் அந்த பெண் என்பதை கண்டறிய காளிதாஸ் முயற்சி செய்கிறார். அதே சமயம் போலீசும் சாய்ஜு கொலை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள்.
இறுதியில் சாய்ஜுவை கொலை செய்த பெண் யார்? எதற்காக கொலை செய்தார்? காளிதாஸ் அந்த பெண்ணை கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் காளிதாஸ், படம் முழுக்க ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அமைதி, சோகம், வருத்தம் என நடிப்பில் பளிச்சிடுகிறார். யார் அந்த பெண் என்பதை கண்டறிய முயற்சிக்கும் இடங்களில் கவர்ந்து இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் ரேபா மோனிகா ஜானுக்கு பெரியதாக வாய்ப்பு இல்லை.
காளிதாசுக்கு அக்காவாக வரும் நமீதா பிரமோத், கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார். போலீசாக வரும் அஸ்வின் குமார் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார். மிடுக்கான தோற்றத்தில் குற்றவாளியை தேடும் காட்சிகளில் சபாஷ் வாங்கி இருக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார் பிரியங்கா சாய். கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து கைத்தட்டல் வாங்கி இருக்கிறார்.
ஒரு கொலை அதை சுற்றி நடக்கும் மர்மம் என கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வினில். கதைக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து இருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை திரைக்கதை ஒரே வேகத்தில் பயணித்து இருப்பது சிறப்பு. அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்க முடியாத அளவுக்கு திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார்.
4 மியூசிக்ஸ் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். இரவில் நடக்கும் காட்சிகளை அழகாக விஷ்ணுவின் கேமரா படம் பிடித்து இருக்கிறது.